தமிழகம்

மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய காதலன்… : வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்தோஷ். 25 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அருகில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

“உனக்கு உரிய வயது வந்ததும் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று கூறிய காதலனின் வார்த்தையை நம்பிய மாணவி அவர் சொல்லியதை செய்துள்ளார். மாணவியின் தந்தை நோயாளி என்பதால் அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாணவியின் தாயார் அடிக்கடி அழைத்துச் சென்று வந்தார். இதனால் மாணவி தனிமையில் இருக்கும் சூழ்நிலை அமையவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சந்தோஷ், அந்த மாணவியுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி அந்த காட்சிகளை மாணவிக்குத் தெரியாமல் தனது செல்போனில் பதிவும் செய்துள்ளார். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாணவியிடம் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டிருக்கிறார் சந்தோஷ். ஒவ்வொரு முறையும் அதைத் தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார். அது குறித்து அந்த மாணவிக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் மயிலாடுதுறைக்கு வந்த சந்தோஷ், மாணவியுடன் தான் உல்லாசமாக இருக்கும் பலவகைப்பட்ட வீடியோக்களை, தனது நண்பரான அக்கலூர் காலனியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் காட்டி மகிழ்ந்திருக்கிறார். கண்ணனுக்கு வயது 36. திருமணமாகி மனைவி, குழந்தைகளும் இருக்கிறார்கள். அந்த வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்துகொண்ட கண்ணன், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை செய்பவர்போல அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று, தனிமையில் இருந்த அந்த மாணவியிடம் வீடியோவைக் காட்டி, தனக்கும் உடன்படும்படி கூறி மிரட்டியுள்ளார்.

வீடியோவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, சம்மதிக்க மறுத்ததோடு கண்ணனைத் திட்டி அனுப்பியிருக்கிறார். அதன் பின் காதலன் சந்தோஷைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டுக் கதறியிருக்கிறார்.

கடந்த வாரம் வீட்டில் மாணவி தனியாக இருந்துள்ளார். அப்போது பட்டப்பகலில் வீடு புகுந்த கண்ணன் மாணவியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது மாணவி கத்தி, கூச்சல் போட்டு போராடியிருக்கிறார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார்.

மாணவி தனக்கு நேர்ந்த அனைத்தையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த அவர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி வழக்கு பதிவு செய்து சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும், அரசியல் செல்வாக்காலும், பெரும் பணம் விளையாடியதாலும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் விடுவித்துவிட்டனர் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவம்போல் நாகை மாவட்டத்திலும் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button