அரசியல்

கூட்டணியிலிருந்து வெளியேறியதா தேமுதிக

உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 90க்கும் மேற்பட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச் செயலாளர் சுதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரேமலதா நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாகவே பேசினார். “தொண்டர்களின் விருப்பத்துக்காக கூட்டணி வைத்தாலும் கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேமுதிக. கேப்டன் விஜயகாந்த் ஒரு வார்த்தை சொன்னால் அதை நிச்சயம் காப்பாற்றுவார். கூட்டணி தர்மத்துக்கு நாங்கள் கட்டுப்பட்டு இருப்போம், ஆனால் கொட்ட கொட்ட குனியமாட்டோம்” என்று பேசினார்

மேலும் அவர், “தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவெடுக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்” என்றார். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் தொண்டர்களின் கர கோஷங்களுக்கு இடையே மைக்கைப் பிடித்த விஜயகாந்த், “குரல் நல்லா இருக்குதா.. இப்ப கேக்குதா..” என்றார். “மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன், சீக்கிரம் வருவேன்” என்றார். பேச்சின் நடுவே அவரது பாணியில் நாக்கை மடித்து விரலை ஆட்டிய போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button