தமிழகம்

வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம்… வசமாக வீடியோவில் சிக்கிய காவல்ஆய்வாளர்

நமது நாட்டில் பணம் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் சாதித்து விட முடியும் என்ற கூற்றை அவ்வப்போது நம்மில் ஒருவர் பயன்படுத்தி விடுவார். இதற்குப் பொருள் நாட்டில் பணத்திற்கு மட்டுமே மதிப்பு, இங்க எதை வேண்டுமானாலும் பணம் கொடுத்து சொந்தமாக்கிக் கொள்ளலாம். சட்டத்தை மீறலாம், வேறு ஒருவருக்கு எதிராகச் சட்டத்தை இயங்கச் செய்யலாம் எனப் பல முறைகேடுகளில் ஈடுபடலாம்.

இந்த குற்றச்சாட்டிற்கு இந்தியா ஆளாகியுள்ளதற்கு, லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள்தான் காரணம் எனக் கூற முடியாது. லஞ்சம் கொடுத்து தங்கள் சுயநலத்திற்காக இயங்கும் தனிநபர்களும்தான் காரணம். இதற்கு உதாரணமாக ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இப்போது வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே இடைய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஹேமலதா. பூமிநாதனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்குமிடையே கடந்த 20 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பார்த்திபனூர் போலீஸார் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பூமிநாதன், ஹேமலதா உள்படப் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண் ஒருவரை விடுவிக்க வேண்டும் என ஒருதரப்பினர், பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கோரிக்கை வைத்தனர். அப்படி அந்த பெண்ணின் பெயரை வழக்கிலிருந்து தூக்க வேண்டும் என்றால் ரூ. 10 ஆயிரம் வேண்டும் என இன்ஸ் ராஜராஜன் கூறியுள்ளார்.

இதையடுத்து 2 தவணையாகச் சம்பந்தப்பட்டவர்கள் ரூ. 5 ஆயிரம் பணத்தை இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே 2வது தவணை கையூட்டுப் பணத்தை ராஜராஜனிடம் வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட தரப்பினர் லஞ்ச ஒழிப்புத் துறையிடன் புகார் அளித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகளை கூறியுள்ளனர். அதன்படி லஞ்சம் கொடுக்க சென்றவர்கள் லஞ்சப் பணத்தில் ஒரு வகை பவுடரை தடவிக் கொடுத்துள்ளனர். மேலும், லஞ்சம் கொடுக்க சென்றபோது வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜராஜனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் பத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button