அரசியல்தமிழகம்

குடியுரிமை மசோதா.. நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… : உதயநிதி ஸ்டாலின் கைது..!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஏராளமான இளைஞரணியினர் கொடி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் நடந்து சென்றார். அவருடன் ஏராளமான இளைஞரணி நிர்வாகிகள் கண்டன முழக்கம் எழுப்பியபடி நடந்து சென்றனர். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். குடியுரிமை மசோதாவை கண்டிக்கிறோம்’, ‘காப்பாற்று, காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று’, ‘இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே’, ‘திரும்ப பெறு, திரும்ப பெறு, குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறு’ என மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தனர். அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க. இளைஞரணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கைதான உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “குடியுரிமை சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர் அகதிகளுக்கும் எதிரானது.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தி.மு.க. இளைஞரணியின் போராட்டம் தொடரும்” என்றார். அதனைத் தொடர்ந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அனைவரும் அடைக்கப்பட்டனர். அங்கு வந்த திமுக பொருளாளர் துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆர்ப்பாட்டம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button