அரசியல்தமிழகம்

டெங்கு சிகிச்சை : இயக்குநரை மாற்றிய அமைச்சர்!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் டெங்குவால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய்ப் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில தினங்களில் டெங்கு பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் கடந்த 2 தினங்களுக்குமுன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் ஜெயசந்திரன் பணியிட மாற்றப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநராக எழிலரசி நியமிக்கப்படுவார் என உத்தரவு வெளியாகி உள்ளது. எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவமனையில் முன்னாள் இயக்குநர் ஜெயசந்திரனுக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மருத்துவமனையை ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை போதுமானதாக இல்லை என்பதால், ஜெயசந்திரன் பணியிட மாற்றப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தான் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது அறியப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் 2 குழந்தைகளுக்கு உயிரிழந்தபின் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button