தமிழகம்

ஆட்டோ சங்கர் பாணியில் ஆட்டோ மோகன்ராஜ்..! : 7 பெண்களின் வீடியோ சிக்கியது

சென்னையில் ஒரு காலத்தில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ சங்கர் பாணியில் சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு ஆட்டோவை தானே ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட் என்ற திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், அவன் 7 பெண்களை பலவந்தமாக மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். அந்த வீடியோக்களில் 6 பேர் குடும்ப பெண்கள் என்பதும் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து குடும்ப நிலவரத்தை விசாரிப்பது. பண பிரச்சனையில் இருக்கும் பெண்கள் என்று தெரிந்தால் பணம் கொடுத்து உதவுவது போல நடித்து தனது வீட்டிற்கு அழைத்து செல்வான் என்றும், அங்கு அவர்களை கடுமையாக மிரட்டி அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தான் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத்து தனது இச்சையை தீர்த்துக் கொள்வான் என்கின்றனர் காவல்துறையினர்.

அந்தவகையில் பல பெண்களை வேட்டையாடிய காமுகன் ஆட்டோ மோகன்ராஜின் அட்டூழியம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்ததற்கு அவனது அரசியல் செல்வாக்கும் அடாவடியான நடவடிக்கைகளுமே காரணம் என்றும் பலாத்கார வீடியோவை காட்டி பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இவனிடம் சிக்கிய 7 பேர்களில் ஒரு பெண்ணை காணவில்லை, அந்த பெண் குடும்பத்துடன் ஊரை காலி செய்து சென்றுவிட்டதாக, போலீசாரிடம் மோகன்ராஜ் தெரிவித்துள்ள நிலையில் அந்த பெண்ணின் கதி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

காமுகன் ஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இவனது தொல்லை தாங்க முடியாமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று வந்த போது அவனது மனைவியை 2 வது தாரமாக மயக்கி திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது அட்டகாசம் தாங்காமல் விட்டுச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவன் மட்டுமல்லாமல் இவனுடன் ஆட்டோ ஓட்டும் மற்றொரு கூட்டாளியும் இது போல பல பெண் பயணிகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது அவனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் என்பவனை 24ந்தேதி கைது செய்த காவல்துறையினர் அவனது செல்போனில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர். இந்த நிலையில் 25ந்தேதி காமுகன் ஆட்டோ மோகன் ராஜ் சிக்கி இருக்கிறான்.

பெண்கள் இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் உஷாராக இருக்க வேண்டும் அதே நேரத்தில் இவர்களை போன்ற காமுகர்கள் மீது சென்னை காவல்துறையினர் பாணியில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

  • செந்தில்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button