அரசியல்

மணிகண்டனை நீக்கியதால் மக்கள் மனதில் இடம் பிடித்த எடப்பாடி : அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புக்கு வந்த பிறகு முதன் முறையாக ஒரு அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 18 மொழிகளில் செய்தி தொலைக்காட்சி தொடங்கிய நிறுவனத்திடம் பேரம் பேசியதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. முதல்வரும் நேரிடையாக அமைச்சரைக் கண்டித்தார் என்றும் ஏற்கனவே செய்திகள் நாம் வெளியிட்டிருந்தோம்.

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது திருவாடனை தொகுதிக்கு செல்வதை அமைச்சர் மணிகண்டன் தடுத்து வருவதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். பேட்டியும் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரத்தில் முன்னாள் எம்பி அன்வர்ராஜாவுக்கும், அமைச்சர் தரப்புக்கும் இடையே அடிதடி மோதல் நடந்துள்ளது. கூட்டுறவு தேர்தலின் போது தென்மண்டல பொருப்பாளராக இருந்த கண்ணப்பனை மரியாதைக்குறைவாக நடத்தியது, இராமநாதபுரத்தில் மணல் திருடர்களுடன் கூட்டணி வைத்து இருந்தது, திமுக ஒன்றிய செயலாளரின் மகனுக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்தது, பரமக்குடி ஒன்றிய துணைச் செயலாளருக்கு மணல் குவாரி அனுமதி கொடுத்தது, மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஒருமையில் பேசுவது போன்ற புகார்கள் ஏற்கனவே இருந்தது. இந்த நிலையில், கொங்கு மாவட்டங்களில் கேபிள் தொழில் செய்து வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை விரிவுபடுத்தி உள்ளனர்.

திமுக ஆட்சியில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேபிள் நிறுவனம்,ஆதிக்கம் செலுத்தி, மற்ற தொலைக்காட்சியின் அலைவரிசை எண்களை பின்னுக்குத் தள்ளியும், போட்டித் தொலைக்காட்சிகளை தெரியவிடாமல் செய்வதும், தெளிவில்லாமல் செய்வதும் புகாராக சென்றதால், ரூ.70 கட்டணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசுக் கேபிளை அறிமுகம் செய்தார்.
அதிலும் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால் அரசுக் கேபிளில் அந்த தொலைக்காட்சி தெரியாமல் செய்து விடுவார்கள். பல கோடி ரூபாய் அரசு விளம்பரம் கிடைக்காது. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த கொங்கு பகுதி தனியார் தொலைக்காட்சியின் கேபிள் தொழில் திருப்பூர், ஈரோடு மட்டுமின்றி தென் மாவட்டம், வடமாவட்டம், மத்திய மாவட்டங்களில் கால் பதித்தது.

இந்த துறைக்கு அமைச்சர் மணிகண்டன். கேபிள் நடத்துபவர்கள் கொங்கு பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி. அரசுக் கேபிளுக்கு பொறுப்பாளர் கொங்கு பகுதியின் இன்னொரு அமைச்சர். இந்தக் கணக்கு புரியாமல் கேபிள் நிறுவனங்களில் தலையிட்டுள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். இது முதல்வரின் நேரடி கவனத்திற்கு சென்றதால் அமைச்சர் எச்சரிக்கப்பட்டுள்ளார். ஆனால், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பற்றி அமைச்சர் மணிகண்டன் வெளிப்படையாக விமர்சனம் செய்ய பதவியை இழந்து விட்டார் மணிகண்டன்.
இந்நிலையில் அமைச்சரவையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நிலவுகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் மலேசியா பாண்டியனிடம் இருக்கிறது. மணிகண்டனைத் தவிர அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது தற்போது பரமக்குடி இடைத்தேர்தலில் வென்ற சதன் பிரபாகர்தான்.

எனவே சதன் பிரபாகருக்குத்தான் முறைப்படி ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் என்ற பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று ஒரு நகர்வு கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரம் மணிகண்டனிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியை அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருத்தருக்கு கொடுத்து அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் அதிமுகவுக்குள் எழுந்துள்ளன.
“மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது பற்றி கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வெளிப்படையான குரல் எதுவும் எழவில்லை. எனவே அவர் கட்சியில் பலமாக இருக்கிறார் என்பது தெரிகிறது. அதேநேரம் மணிகண்டனை நீக்கியதற்கு பதிலாக அந்த ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதா, அல்லது மணிகண்டன் சார்ந்த சாதிக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதா என்ற சிக்கல் முதல்வர் முன்னால் இருக்கிறது. மாவட்டம் சார்ந்த பிரதிநிதித்துவமே வேண்டுமென்றும், சாதி சார்ந்த பிரதிநித்துவமே வேண்டுமென்றும் இருவிதமான அழுத்தங்கள் முதல்வருக்கு தரப்படுகின்றன.

மணிகண்டன் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர். அவர் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரது பொறுப்புகளை மிகவும் சாமர்த்தியமாக அதே சமுதாயத்தைச் சேர்ந்த உதயகுமாரிடம் ஒப்படைத்தார் முதல்வர். ஆனபோதும் ஏற்கனவே வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் அதிக வேலைகள் உதயகுமாருக்கு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத்துறையை தொடர்ந்து அவரே நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மணிகண்டன் இருந்த இடத்தில் அதே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே அதிமுக எம்.எல்.ஏ.வான சதன் பிரபாகர் பெயர் அடிபடுகிறது. சதன் பிரபாகர் முன்னாள் எம்பி நிறைகுளத்தானின் மகன்.
ஊராட்சித் தலைவர், மாவட்டக் கவுன்சிலர் என்ற பதவிகள் வகித்திருந்த சதன் பிரபாகருக்கு கட்சியில் இளைஞரணி உட்பட பொறுப்புகள் கொடுத்தார் ஜெயலலிதா. மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதி பொறுப்பாளர்களாக தங்கமணி, சதன் பிரபாகர் ஆகியோரை நியமித்தார் ஜெயலலிதா. கட்சி அமைப்பு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார் சதன் பிரபாகர்.

இந்த அடிப்படையில்தான் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு சதன் பிரபாகரை தேர்வு செய்தார் முதல்வர் எடப்பாடி. அங்கே அவர் வெற்றிபெற்றுவிட்ட சூழலில்தான் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இப்போது அமைச்சரும் இல்லாத நிலை இருக்கிறது.
ஏற்கனவே தென் மாவட்டங்களில் இருந்து தனி தொகுதி எம்.எல்.ஏ.க்கள் சிலர் தினகரன் அணிக்குச் சென்ற நிலையில் தென் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் நம்பிக்கையான இடத்தைப் பெற வேண்டுமென்று நினைக்கிறார் எடப்பாடி. அதனால் மணிகண்டன் வகித்த துறையை சதன் பிரபாகருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறார். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் இது தொடர்பாக முதல்வர் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது சதன் பிரபாகரும் உடன் சென்றிருக்கிறார். உதயகுமார் ஜெ. பேரவை செயலாளராக இப்போது இருக்கும் நிலையில் அதே ஜெ,. பேரவையில் இணைச் செயலாளராக இருக்கிறார் சதன் பிரபாகர். எனவே அவரை அமைச்சர் ஆக்கி தென் மாவட்டத்தில் தன் சிண்டிக்கேட்டை பலப்படுத்திக் கொள்ள உதயகுமாரும் நினைக்கிறார்.

அதேநேரம் முக்குலத்தோர் சமுதாயத்து அமைச்சர்கள் சிலர் முதல்வரிடம், ‘எங்க சமுதாயத்து அமைச்சர் பதவியை எங்க சமுதாயத்துக்கிட்டயே கொடுங்க’ என்று வற்புறுத்தி வருகிறார்கள். எனவே புதிய அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து எடப்பாடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் இரு வருடங்கள் ஆட்சி இருக்கும் நிலையில் இப்போது இடைத்தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ.க்களான சிலருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற பேச்சும் உலவுகிறது” என்று கூறினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button