![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/07/Cow-related-violence_01.jpg)
நாகை மாவட்டத்தில் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது பைசான் ஜூலை 9ஆம் தேதி மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டதால், சுமார் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தேடிச் சென்று தாக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். அதிக கவனம் பெறாமலே அந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது. தற்போது நாகையில் நடந்துள்ள இஸ்லாமிய இளைஞர் மீதான தாக்குதல் தமிழகத்திலும் பசுப் பாதுகாவலர்களின் வன்முறை ஆட்டம் முதலடி வைத்துள்ளதா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.
ஓராண்டுக்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் பசு பாதுகாவலர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் கும்பல்களால் தாக்கப்படுவதைத் தடுக்க உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் அந்த உத்தரவு கூறியது.
யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மாட்டிறைச்சி எதிர்ப்பு முகமாக நடைபெறும் இந்த சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அந்த அமர்வு அறிவுறுத்தியது. இந்த உத்தரவு வெளியானபோதே பசுப் பாதுகாவலர்களின் வன்முறைகள் நாடு முழுக்க பல இடங்களில் அரங்கேறுவது நாளுக்கு நாள் செய்திகளில் இடம்பெற்று வந்தன.
இது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கேட்டபோது, இந்த வகையான வன்முறைகள் தொடர்பாக தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் எதையும் பேணவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
ஆனால், இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம் தன்னிடமுள்ள தரவுகளை வெளியிட்டது. அதில் 2012ஆம் ஆண்டிலிருந்து பசுவின் பெயரால் நடத்த வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது தெரிகிறது. 2012 முதல் 2018 வரை 6 ஆண்டுகளில் மொத்தம் 88 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 288 பேர். 2017ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 37 பேர் பசு பாதுகாவலர்களின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 33 பேர் பசு தொடர்பான வன்முறை நிகழ்வுகளில் கொல்லப்பட்டுள்ளனர். காயப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 188. இவர்களில் 107 பேர் பலத்த காயமும் 81 பேர் லேசான காயமும் அடைந்தவர்கள்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் 56 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 11 சதவீதம் பேர் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 9 சதவீதம் பேர் இந்துக்கள் என்றும் அந்த புள்ளிவிரவம் சொல்கிறது.
2012ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டில் தலா ஒரு முறை இத்தகு வன்முறைகள் நடத்துள்ளன. பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 2014 முதல் 2018 வரை 86 சம்பவங்கள் நடத்துள்ளன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் 47 தாக்குதல்கள் நடந்துள்ளன, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 10 தாக்குதல் நடந்துள்ளன எனவும் மேற்கண்ட புள்ளிவிரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் போன்றவற்றில் பசுப் பாதுகாப்பு வன்முறைகள் மிகையாக உள்ளன.
இத்தகு சூழலில்தான் உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஜூலையில் சட்டம் பிரத்யேகமான சட்டம் மூலம் பசுப் பாதுகாப்பு வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பாகவே 2017ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசு அதிகார அமைப்புகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியது. முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் மாட்டிறைச்சி வைத்திருப்பது, வாங்கியது, விற்றது அல்லது சாப்பிட்டது ஆகியவை ஒரு குற்றம் எனக் கூறி அவர்கள் மீது தாக்கல் நடத்துகிறார்கள். பசுக்களின் காவலர்களாக தங்களைக் கற்பனை செய்துகொண்ட இவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் எனக் அரசைக் கேட்டுக்கொண்டது.
![](http://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/07/Untitled.jpg)
ஆனால் இதுவரை மத்திய அரசோ ஏதேனும் ஒரு மாநில அரசோ பசு பாதுகாவலர்களை ஒடுக்க சட்டம் இயற்றவில்லை. மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதான இந்த வெறுப்புணர்வு அல்லது சகிப்பின்மை வட நாட்டில்தான் அதிகமாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் தரும் தகவலில் தெரிகிறது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பசுப் பாதுகாவலர்களால் நடக்கும் வன்முறைகள் தென் மாநிலங்களிலும் பரவியுள்ளது. தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 5 பேர் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டனர்.
2012 முதல் தற்போது வரையான கணக்கை பார்க்கும்போது, நாடு முழுக்க 131 பசு பாதுகாப்பு வன்முறைகள் நடந்துள்ளன. 336 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் இறந்துள்ளனர். 2018 ஜூலையில் 88 ஆக இருந்த எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் கிடத்தட்ட 50 சதவீதம் (43) அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் இதுவரை கர்நாடகாவில் மட்டும் 8 முறை இத்தகு வன்முறைகள் நடந்துள்ளன. 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதான வெறுப்பு தமிழகத்திலும் நாகை தாக்குதல் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. எந்த உணவை உட்கொள்வது என்பதை முடிவு செய்வது தனிமனித உரிமை எனவும் நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமைக்கே விரோதமானது எனவும் எதிர்ப்புக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பு பெருகிவரும் இதே நாடு, உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுதான் வியப்பிலும் வியப்பாக உள்ளது.