அரசியல்தமிழகம்

உலகத் தமிழர்களின் தலைவர்.. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்

வரலாறாகவே வாழ்ந்து மறைந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, அவரின் இதயத்தை இரவல் வாங்கினார். வாங்கிய இதயத்தை இன்று அண்ணாவிடமே திருப்பி கொடுத்துள்ளார்.
அவரின் வாழ்க்கையை திருப்பி பார்த்தோமானால், சென்னை மாநில சுயாட்சி மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவராகி, கள்ளக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து, திருச்சி சிறையில் சித்திரவதைப்பட்டு, நாகையில் போட்டியிட வலம் வந்து, குளித்தலையில் போட்டியிட்டு, சேலம் தொடங்கி பல்வேறு ஊர்களில் உதயசூரியன் நாடகம் போட்டு, நங்கவரம் விவசாயிகளுக்காக போராடி, முதுகுளத்தூருக்கு விசாரணைக்கு போய், பரமக்குடி , சிவகங்கையில் கட்சியை வளர்த்து தேவகோட்டை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து, சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, தஞ்சாவூர் தொகுதியில் வென்று, சிதம்பரம் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செயல்திட்டக் குழுத் தலைவராகி திருவண்ணாமலை இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைத்து, சென்னை கடற்கரையில் பத்து லட்ச ரூபாய் சபதமேற்று, நெல்லை இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்திற்கு தலைமை வகித்து, சென்னையில் அன்பகம் கட்டி, தடுப்புக் காவல் சட்டப்படி கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, திருப்புமுனை மாநாடாம் விருகம்பாக்கம் தேர்தல் மாநாட்டு இடத்தை செம்மைப்படுத்தி, சைதாப்பேட்டையில் நின்று, வென்று, தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்குள் போனதால்தான் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் வசமானது தமிழ்நாடு.
அண்ணாவை வழிமொழிந்து நெடுஞ்செழியன் பேசினார், சம்பத் பேசினார், சிற்றரசு பேசினார், தர்மாம்பாள் பேசினார், மதியழகன் பேசினார், தில்லை வில்லாளன் பேசினார், பராங்குசம் பேசினார், சத்ய வாணிமுத்து பேசினார், அன்பில் தர்மலிங்கம் பேசினார், சிவசாமி பேசினார், பழனிச்சாமி பேசினார், இராஜமாணிக்கம் பேசினார், கே.ஆர். இராமசாமி பேசினார், தில்லை வடிவேலு பேசினார், நாஞ்சில் மனோகரன் பேசினார், சிவிஎம் அண்ணாமலை பேசினார், இறுதியில் ஒலிபெருக்கி 27 வயதான இளைஞர் கலைஞர் கையில் தரப்பட்டது. கலைஞர் பேசினார், வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்பு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரம் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்றெழுத்து, அந்த அண்ணனைத் தலைமை ஏற்க வழிமொழிகிறேன் என்று கலைஞர் பேசி முடித்தார்.
அடுத்து அண்ணா பேச வந்தார். ஆனால் கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் இதயத்தில் கலைஞரின் பேச்சு அந்த வரவேற்பு பேச்சு ஒலித்துக் கொண்டே இருந்தது. அதுவரை தமிழகம் கேட்காத குரல், அதுவரை தமிழகம் உணராத தமிழ், அதுவரை அண்ணா பார்க்காத ஆள், கலைஞரின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது.


உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கலைஞரிடம் கேட்கப்பட்ட போது, ஓய்வறியாமல் உழைத்தவன் இங்கு ஓய்வு கொள்கிறான் என்று எழுதச் சொன்னவர் அவர். அவரை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைத்தது அந்த உழைப்பு.
அன்றைய தஞ்சை மாவட்டத்தின் திருக்குவளை என்று அழைக்கப்பட்ட திருக்கொழினி என்ற கிராமத்தில் விவசாயியாகவும், வித்வானாகவும், வைத்தியராகவும், கவிஞராகவும் வாழ்ந்த முத்துவேலருக்கு மகனாக பிறந்த கலைஞர் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தனக்கான இடத்தைக் கேட்டு பன்னிரெண்டு வயதிலேயே எனக்கு நீங்கள் இடமளிக்காவிட்டால் கமலாலய குளத்தில் விழுந்து செத்து போவேன் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரிடம் மிரட்டி இடம் பெற்றவர் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
ஆன்மிக பெருமை கொண்ட ஊரில் சதா கோயிலுக்கு மொட்டை போடும் வேண்டுதல் செய்து கொள்ளும் அஞ்சுகம் அம்மாளுக்கு மகனாகப் பிறந்தாலும், பள்ளியில் படித்த பனகல் அரசரின் பாடப்புத்தகம் கலைஞரின் சிந்தனையை நீதிக்கட்சியின் சமூக நீதிக்குப் பக்கமாக மாற்றியது. இராஜாஜியின் முதல் கட்ட ஆட்சியில் இந்தி திணிக்கப்பட்ட போது பதினைந்து வயது மாணவனாக வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்.. வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடிவோம் என்று முழக்கமிடும் தமிழ் வாய்த்தது.
கதை எழுதுவது, அதற்கு வசனம் எழுதுவது, அதையும் தானே நடிப்பது என்ற கலையில் தேர்ந்த கலைஞர் மாணவ நேசன் என்ற கையெழுத்து பத்திரிகையையும் நடத்தினார். அந்த கையெழுத்து பத்திரிகைதான் எழுபத்தி ஆறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் நம்மைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் முரசொலி.
கிளம்பிற்றுதாம் தமிழ்ச்சிங்கக் கூட்டம், கிழித்தெரிய தேடுதுதான் பகைக் கூட்டத்தை என்ற வரிகளை பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது கலைஞர் நடத்திவந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்திற்காகத்தான். பள்ளிக் காலத்தில் சமூகநீதி படிக்கப் போனதால் மூன்று முறை பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி அடைந்த கலைஞர் எழுத்தும் பேச்சும் நாடகக் கலையுமே தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். பழனியப்பன் என்ற நாடகத்தை திராவிட நடிகர் கழகம் என்ற பெயரில் தயாரித்து விழுப்புரத்தில் அரங்கேற்றினார் கலைஞர். புதுச்சேரியில் அதை அரங்கேற்றும்போது தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் மூலமாக பெரியாரின் அரவணைப்பு கிடைத்தது. ஈரோட்டில் குடியரசு பத்திரிகையின் துணை ஆசிரியரானார். ஓராண்டு காலம் இவரின் எழுத்து குடியரசு பரவிய இடமெல்லாம் பரவியது. தேர்ந்தேடுக்கும் சொல்லுக்கு ஒரு மயக்கமும், படித்திடும் வரிகளுக்கு ஒருவித நளினமும் அமைந்துவிட்டால் சினிமாத் தமிழ் வெல்லும் என்பதை கலைஞர். உணர்ந்ததால் தான் மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள், பராசக்தி, தேவகி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, மலைக்கள்ளன், அம்மையப்பன், இராஜா ராணி, ரங்கோன் ராதா, புதுமைப் பித்தன், புதையல், குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளம் குமரி, தாயில்லா பிள்ளை, இருவர் உள்ளம், பூம்புகார், பூமாலை, அவன் பித்தானா? என இருபத்தைந்து படங்களுக்கு கதை, வசனம் எழுதி திரையில் மின்னினார்.
சர்க்கஸ்காரன் உயரத்தில் இருந்தாலும் அவனது சிந்தனை பூமியிலேயே இருக்கும் என்பதை போல தம்பி கருணாநிதி சினிமாவில் இருந்தாலும் சிந்தனை எப்போதும் அரசியலில்தான் என்று அன்பகம் திறப்பு விழாவில் அண்ணா சொன்னதைப் போல அரசியலில் கால்பதித்திருந்தார் கலைஞர்.
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய போது கழகத்தின் பிரச்சார செயலாளர் கலைஞர். கோவில் பட்டியிலும், தூத்துக்குடியிலும் கட்சியை தொடங்கி வைக்க அண்ணாவால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
திருச்சியில் பேச தன்னை அழைக்க வந்தபோது கருணாநிதியை வைத்து கூட்டம் நடத்து என்று அண்ணாவே சொல்ல ஆரம்பித்தார். அண்ணாவிற்கு மாற்றாக மட்டுமல்ல. பல ஊர்களில் இவரே அண்ணாவாக பார்க்கப்பட்டார். கலைஞரைப் போலவும், கலைஞரை விடவும் நன்றாக பேசக்கூடிய எத்தனையோ பேர் கழகத்தில் உண்டு. பேச்சாளராகவே இருந்து பேச்சாளராகவே செத்துப் போனார்கள். ஆனால் ஒரு பேச்சாளர் தலைவரானது கலைஞர் மட்டும்தான். ஏனென்றால் அவரிடம் இருந்தது வெறும் பேச்சல்ல.. அதை மீறி நின்ற செயல். நாடு முழுக்க இராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. திருவையாறுக்கு வரும் முதல்வர் இராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டுமென்று தஞ்சை மாவட்டச் செயலாளர் கே.கே.நீலமேகத்திடம் கலைஞரும், மன்னை நாராயணசாமியும் போய் கேட்டார்கள்.
கட்சி இங்கே இன்னும் இங்கே வளரவே இல்லை. யாரும் வரமாட்டார்கள் என்றார் நீலமேகம். இதையே சபதமாக ஏற்று இரவும் பகலுமாக இருபத்தி ஆறு நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் போய் பிரச்சாரம் செய்து தொண்டர்களைச் சேர்த்து, காவல்துறையின் தடுப்புக் காவலையும் மீறி வெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பள்ளி அக்ரகாரத்தில் இராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டினார் கலைஞர்.
ஆறுமாத காலம் அவரால் எழ முடியாத அளவுக்கு நோயில் படுத்தார். ஆனால் தஞ்சை மாவட்டம் முழுக்க கட்சியை வளர்த்தார். மும்முனைப் போராட்டத்தில் டால்மியாபுரம் என்ற ஊரின் பெயர் பலகையில் கள்ளக்குடி என்ற தாளை ஒட்ட வேண்டும் என்பது மட்டும்தான் அண்ணாவின் கட்டளை. ஒட்டினார் கலைஞர். ஆனால் காவல்துறை அமைதியாக இருந்தது. சும்மா திரும்புவதற்கா போராட்டம். இரயிலை மறிக்க தண்டவாளத்தில் படுத்தார். அதைத்தான் தமிழகமே திரும்பிப் பார்த்தது. 1957 தேர்தலில் நாகப்பட்டினத்தில் போட்டியிடவே தொகுதியை தயாராக வைத்திருந்தார் கலைஞர். ஆனால் அண்ணா அறிவித்தது குளித்தலை. கவலையே படவில்லை கலைஞர். குளித்தலையை தன் வசமாக்கினார். 1958 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் சின்னமாக உதயசூரியன் அதிகாரப்பூர்வமாக கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே உதயசூரியன் நாடகம் தயாரித்து ஊர் ஊராக கொண்டு போய் அந்த நாடகத்தைப் போட்டு சின்னத்தை பிரபலப்படுத்தி வைத்திருந்தவர் கலைஞர். தேவகோட்டை இடைத்தேர்தலில் தான் அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னத்தில் முதன்முதலாக திராவிட முன்னேற்ற கழகம் நின்றது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் முப்பது பேரை நிறுத்தலாம் என்றார் அண்ணா. தொண்ணூறு பேரை நிறுத்தலாம் என்றார் கலைஞர். இவர் வற்புறுத்தியதால் சம்மதித்தார் அண்ணா. திராவிட முன்னேற்ற கழகம் நாற்பத்தி ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. கலைஞருக்கு கிடைத்தது சாதாரண மோதிரமாக இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்தது சென்னை மாநகரம். 1963 ல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் பா.உ.சண்முகம் வெல்வார் என்று அண்ணா நம்பிக்கை வைக்கவில்லை. கலைஞரின் உழைப்பை கடைக்கோடி தொண்டனும் உணர்ந்தது திருவண்ணாமலை வெற்றிக்கு பிறகுதான். அதன் வெற்றிவிழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது. இன்னும் நான்கு ஆண்டுகளில் பொதுத்தேர்தல் வரப்போகிறது. நாம் இருநூறு தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் சுமார் 10 லட்ச ரூபாய் வேண்டும். 10 லட்ச ரூபாய் திரட்டினால் தான் வெல்ல முடியும். இன்றே நிதி வசூலை தொடங்கி வைக்கிறேன் என்று கலைஞர் அறிவித்தார். பொருளாளர் என்ற முறையில் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பொதுச்செயலாளர் அண்ணா திகைத்துப் போனார். 53 ஆண்டுகளுக்கு முன்னால் 10 லட்ச ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை. 10 லட்சம் அல்ல 11 லட்சம் திரட்டிக் காட்டினார் கலைஞர். ஒரு கட்சியில் பலதரப்பட்டவர்கள் இருந்தாலும் அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கும் திறமையுள்ளவர்கள் வேண்டும். தம்பி கருணாநிதி அந்த சிறப்புகளை நன்கு பெற்றவர்களில் ஒருவர் என்றார் அண்ணா. நாற்பது வயது கலைஞரை அறுபது வயது, எழுபது வயது மனிதர்களும் தலைவராக ஏற்றுக் கொள்ள காரணம் இந்த உழைப்புதான்.
அதனால்தான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தியாக அவர் இருந்தார். அவரை ஆதரித்து ஒருவர் கட்சி நடத்தலாம். அல்லது எதிர்த்து ஒருவர் கட்சி நடத்தலாம். ஆனால் கலைஞர் என்ற பெயரை சொல்லாமல் எவரும் கட்சி நடத்த முடியாது.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சகாப்தம், கழகக் கோட்டையின் காவல் தெய்வம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தாய் திருநாடாம் தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சர். இந்திய உப கண்டத்தில் மட்டுமல்லாமல் உலகமெல்லாம் பரவியிருக்கும் தமிழினத்தின் தலைவர். கோடிக்கணக்கான தமிழ் மக்களை தனது தமிழால் கட்டிப் போட்ட தமிழ் ஆசான் லட்சக்கணக்கான தொண்டர்களை தனது குரலால் கட்டி இணைத்த சாந்தக்குரலோன். தந்தை பெரியாரால் தமிழக சமுதாயத்தின் கதி என்று அழைக்கப்பட்ட மானமிகு சுயமரியாதைக்காரர். பேரறிஞர் அண்ணாவால் நல்ல தம்பி என்று அழைக்கப்பட்ட சுறுசுறு தம்பி புரட்சிக் கவிஞன் பாரதி தாசனால் திருவாரூரில் புலி இளைஞர் என்று மகுடம் சூட்டப்பட்டவர்.
கலைஞர் உருவில் அண்ணாவைக் கண்டேன் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் பெற்றவர். நண்பராக இருந்தாலும், விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர் என்று இந்திரா காந்தியால் பட்டயம் பெற்றவர். அண்ணாத்துரைக்கு இவர்தான் சரியான வாரிசு என்று பாபு ஜெகஜீவன்ராமால் முத்திரை பெற்றவர். கருணையும், நிதியும் ஆனவர் என்பது வினோபாவால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
எம் தலைவர் நம் தலைவர் நம்மை எப்போதும் ஏமாற்றாத தலைவர். முதன்முதலாக ஏமாற்றிவிட்டு போய்விட்டார். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று நீங்கள் எழுதினீர்கள். ஆனால் நீங்களோ நேற்றைய வரலாறு, இன்றைய வரலாறு, நாளைய வரலாறு உங்கள் எழுத்து எங்களுக்கு அகரம். உங்கள் பேச்சு எங்களுக்கு காலக்கண்ணாடி உங்களது செயலே எங்களை எப்போதும் செதுக்கும். இருந்தாலும் இறந்தாலும் எங்களின் இயக்கம் நீங்கள். இரத்தம் நீங்கள், இதயம் நீங்கள்.. எல்லாம் நீங்கள்.

-இப்படிக்கு உடன்பிறப்புகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button