தமிழகம்

குடிநீர் தேவையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னை நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினர்.
மேலும், கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் எத்தனை பயன்பாட்டில் உள்ளன என்றும் அவற்றின் மூலம் எவ்வளவு நீர் விநியோகிக்கப்படுகிறது என்றும் வினா எழுப்பினர். புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆலைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த விவரங்களை வரும் 17-ம் தேதிக்குள் அறிக்கையளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதால் மக்கள் தண்ணீரின்றி அவதிக்குள்ளாவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்பது குறித்தும் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button