அரசின் அலட்சியத்தால் மூடப்படும் கயிறு தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் வேதனை!
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/05/kayar3.jpg)
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசின் அலட்சியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடும் நிலை உருவாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் 46 லட்சம் தென்னை மரங்களை இழந்து, விவசாயிகள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கயிறு தொழிற்சாலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
![](http://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/05/Master3.jpg)
புயல் பாதிப்பு குறித்து பல்வேறு துறையினர் கணக்கெடுப்பு நடத்தியும் அரசுதரப்பில் இருந்து இதுவரை ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முற்றிலும் முடங்கி கிடக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் பட்டதாரி மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் உருவாக்கிய தொழிற்சாலை ஆறு மாதமாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் வங்கி கடன் கட்ட முடியாமலும், ஊதியம் கொடுக்க முடியாமலும் தவிப்பதாகவும், அரசு சிறு உதவி கூட செய்யவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனைபட தெரிவித்தார்.
குறிப்பாக கயிறு தொழிற்சாலைகளை மட்டும் நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்விற்கு கூட சிரமப்படுவதாக தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இதே நிலை நீடித்தால் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என தொழிலாளர்கள் வேதனைபட தெரிவித்தனர்.
எனவே நிலைமை இன்னும் மோசமாவதற்குள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கயிறு தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.