அரசியல்சினிமா

ரகசியங்கள் கசிவது யாரால்…: ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது… அவரைப்பற்றிய எந்த செய்தியானாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது இப்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் என தினமும் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி ரஜினியை மெர்சலாக்கியுள்ளது.

இதை தடுக்க என்ன செய்யலாம் என்று படக்குழு டிசைன் டிசைனாக யோசித்தாலும் ஐடியா எதுவும் உருப்படியாக இல்லை… காரணம் தர்பார் படப்பிடிப்பு நடக்கும் இடம் ஒரு கல்லூரி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இடம் என்பதால் அங்கே யார் எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்றெல்லாம் ஆள் போட்டு பார்க்க முடியாத நிலை. ஜிம் பாய்ஸ் எல்லாம் அங்கே எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் நிர்வாகத்திடம் சொல்லி மாணவர்களை கெடுபிடி படுத்த கடுப்பான மாணவர்கள் முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு கல்லூரி மாடிகளில் இருந்து கல் அடிக்கிறார்களாம்… இதைப்பார்த்து ரஜினி, நயன்தாரா உட்பட படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

குறிப்பாக ரஜினிகாந்த் பயங்கர அப்செட் ஆகியிருக்கிறாராம்… இயக்குனர் முருகதாசிடம் ‘பேசாமல் ஷூட்டிங் ஸ்பாட்டை மாத்திட்டா தேவலை’ என்று சொல்லியிருக்கிறார்.
தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்கள்தான் இப்படி வெளியாகி ரஜினியை டென்ஷன் ஆக்கி வருகிறது என்றால் அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களும் எப்படியோ வெளியாகி அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி வீட்டில் இப்போது எதையும் ரகசியமாக பேசவோ… செய்யவோ முடியாது போல… எதை செய்தாலும் அது உடனடியாக சமூகவலைதளங்களில் வெளியாகி விடுகிறது. இளைய மகள் சவுந்தர்யாவின் டைவர்ஸ் தொடங்கி அவரின் இரண்டாவது கல்யாணம் யாரோடு எப்போது என்பதில் ஆரம்பித்து மூத்த மருமகன் தனுஷ் நிறுவனமான ஒண்டர்பார் விவகாரம்… ரஜினிமக்கள் மன்ற விவகாரங்கள் வரை எதை செய்தாலும் பேசினாலும் ரஜினி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு எப்படி வெளியே கசிகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரஜினியும், அவர் குடும்பத்தாரும் கடும் மனஉளைச்சலில் இருந்தனர்.

காரணம், ரஜினி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து திரும்பிய பின்னர் அவர் எங்கே போனாலும் கூடவே உதவிக்கு பலர் இருக்கிறார்கள். அதோடு, அவரது செய்திகளை வெளியே சொல்லவும் உதவியாளர்களை வைத்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லவும் ஒரு உதவியாளரை வைத்திருக்கிறார். ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பல ஆண்டுகளாக ரஜினி குடும்பத்தில் பணி செய்து வருகிறவர்கள். ஆன்மீகத்தில் ரஜினி அதிக ஈடுபாடு காட்டினாலும் உதவியாளர்கள் விஷயத்தில் மதம் பார்க்காமல் கூடவே கிறிஸ்தவ, இஸ்லாமிய உதவியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்.
அவர்கள் எல்லாரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் என்று இதுவரை நம்பி வந்த ரஜினிக்கு சமீபத்திய பல தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்திருக்கிறதாம். தனது வீட்டில் பேசப்படும் குடும்ப விஷயங்கள் கூட மீடியாக்களில் வெளியாகி பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம் ரஜினிக்கு.

ரஜினியின் அரசியல் பிரவேச விஷயத்தை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அவரது சினிமா வசனம் போலவே ‘அவர் எப்போது வருவார்… எப்படி வருவார்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார்னு’ சொல்லிகிட்டிருக்காங்க. சட்டமன்ற தேர்தலுக்கு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் ரஜினிமக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு என்று சில விவரங்கள் மீடியாக்களில் வெளியானதை பார்த்ததும் ரஜினி உச்சபட்ச கோபம் அடைந்திருக்கிறார்.

ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாவதால் கடும் எரிச்சலில் இருந்த ரஜினிக்கு தனது மக்கள் மன்ற விவகாரங்களும் மீடியாக்களில் வெளியாவதை பார்த்து எரிச்சலின் உச்சத்திற்கே போய் இதுபோன்ற தகவல்கள் எப்படி வெளியே போகிறது என்பதை கண்டுபிடிக்க சின்ன மருமகன் விசாகனிடம் தனி அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம்.

தனுஷ் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் சின்ன மருமகன் விசாகனிடம் ‘வீட்டில் இருந்து தகவல்களை வெளியில் சொல்லும் கருப்பு ஆடு யார்’ என்பதை கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைத்ததிருக்கிறாராம் ரஜினி.

பல மாதங்களாக சந்தேக வளையத்தில் இருக்கிற சிலரை இளைய மருமகன் விசாகன் கண்டுபிடித்து விட்டார் என்றும் ஆதாரத்தோடு மாமனார் ரஜினியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தர்பார் படப்பிடிப்பை மும்பையில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தனது வீட்டில் விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ‘கருப்பு ஆடு’ வேலை பார்க்கும் நபரை ரஜினி கண்டுபிடித்து வெளியே துரத்துவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எது எப்படியோ ரஜினி என்றாலே பரபரப்பு என்ற நிலை மீண்டும் உறுதியாகியிருக்கிறது… ரஜினி வீட்டில் கருப்பு ஆடு என்ற விவகாரம் அதை தொடர்ந்து அதை உளவு பார்க்க இளைய மருமகனுக்கு ரஜினி கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்தான் இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்…!

  • கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button