திருப்பூரில் மாணவிகளை ஆபாசமாக தொட்டு கராத்தே பயிற்சி வீடியோ ! மௌனம் காக்கும் சைபர் க்ரைம் போலீசார் !

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது பொதுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே போன்ற தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கராத்தே தற்காப்பு கலை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எந்த சங்கத்திற்கும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அங்கீகாரம் வழங்கவில்லை. தேசிய அளவில் கராத்தே போட்டிகள் நடத்தும் போது இந்தியா என்கிற பெயரில் கராத்தே போட்டிகள் நடத்த தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேச கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடாக் கமிட்டியின் மேற்பார்வையில் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கராத்தே பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு அரசு சார்பில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில் தனியார் பயிற்சி மையங்களை நாடவேண்டிய சூழலில், ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே திருப்பூரை மையமாக கொண்டு செயல்படும் தனியார் கராத்தே பயிற்சி பள்ளி தனது இணையதளத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து வீடியோ வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்கிற போர்வையில் அத்துமீறி குழந்தைகள் மீது தொடக்கூடாத இடத்தில் கை வைத்துக்கொண்டு பயிற்சி அளிப்பது பொதுமக்களை பதை பதைக்க வைத்துள்ளது. இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க தவறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் என்.டி. ராஜசேகர் கராத்தே பயிற்சி அளிப்பதாக கூறி திருப்பூர் கராத்தே பயிற்சி சார்பில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்படி கராத்தே பள்ளி சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ குறித்து கருத்து தெரிவித்த மூத்த பயிற்சியாளர் மாணிக்கவாசகம், கராத்தே கலை ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் நிறைந்த கலை, மேற்படி கராத்தே பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்படுவது குறித்து கூறும்போது பேட் டச், குட் டச், குறித்து பாடம் எடுப்பதாக கூறி இது போன்று குழந்தைகளுக்கு உடல் மீது அத்துமீறி தொட்டு மிக அருவருக்கத்தக்க வகையிலும், விதி முறைகளை மீறி செயல்படும் பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி இணையத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெறிவித்த முன்னாள் காவல்துறையை சேர்ந்தவரும், சர்வதேச கராத்தே வீரருமான தனசேகரன் கருத்து தெரிவிக்கையில், பாலியல் ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராத்தே தற்காப்பு கலை கற்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், எனவே பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி முழுமையாக சென்றடைந்து வாழ்க்கையில் அச்சமின்றி வாழ பெண் பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இதுபோன்று விளம்பரத்திற்காக பயிற்சிக்காக கலந்துகொள்ளும் மாணவிகளில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வியாபார நோக்கில் செயல்படும் கராத்தே பயிற்சி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.




