அரசியல்தமிழகம்

கோடநாடு விவகாரம் : முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பேச தடை

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்குதொடர்ந்தது.
இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் கோடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டது.
இதை ஏற்ற உயர்நீதிமன்றம், கோடநாடு விவகாரம் பற்றி தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என கூறியிருந்தது. ஆனால் தேர்தல் பரப்புரையில், கோடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, தமிழக அரசின் சார்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் பிரதான வழக்கும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தார். அந்த வீடியோவை நீதிபதி நீதிமன்றத்தில் பார்த்தார். கோடநாடு விவகாரம் தொடர்பாக பேசக்கூடாது என கூறியிருந்தும் தொடர்ந்து பேசியது ஏன் என, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.தேர்தல் பிரச்சாரம் முடிய இருப்பதால் இந்த விவகாரத்தை இனி பேசப் போவதில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார். பிரதான வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button