ஆடு களவாணியை… கொலை குற்றவாளியாக்கிய போலீஸ் ! “மையல்” படத்தின் விமர்சனம்

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனம் சார்பில், அனுபமா விக்ரம் சிங் & வேணுகோபால். ஆர் தயாரிப்பில், சேது, சம்ருதி தாரா, பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம். பாலா உள்ளிட்டோர் நடிப்பில், ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மையல்”.
கதைப்படி.. இரவு நேரத்தில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் செல்கிறது. பின்னர் அதிகாலையில் விஷயம் வெளியே தெரிந்ததும் கிராமமே பரபரப்பாகிறது. அதை நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஆடுகள் அடைக்கப்பட்ட பட்டியில் நுழைந்து, சேது ஒரு ஆட்டை திருடிச்செல்கிறார். பின்னர் அவரை விரட்டிச் சென்றபோது, இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு, காட்டுப்பகுதியில் ஓடுகிறார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுகிறார். விரட்டி வந்தவர்களும் திரும்பிச் செல்கின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களையும் காவல்துறையினர் பரபரப்பாக விசாரணை செய்கின்றனர். பின்னர் அதிகாலையில் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட சூன்யக்கார குடும்பத்தைச் சேர்ந்த அல்லி ( சம்ருதி தாரா ) கிணற்றுக்குள் கிடந்த சேதுவை காப்பாற்றி, வைத்தியம் பார்த்து அடைக்கலம் கொடுக்கிறார். வெளியூர் சென்ற சூனியக்கார கிழவி ரத்ன கலா வந்ததும் கிளம்புமாறு சேதுவிடம் அல்லி கூறுகிறார். இதற்கிடையில் இருவருக்கும் காதல் மலர்கிறது. இவர்களது காதலை அறிந்த பாட்டி, களவாணி பயலை நம்பி எப்படி பேத்தியை அனுப்புவது என காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரில் பிரச்சினை முடிந்ததும், இரவு நேரத்தில் சேதுவை ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.

ஊருக்குள் வந்த சேதுவை விசாரணைக்காக போலீஸ் அழைத்துச் செல்கின்றனர். பின்னர் அல்லியின் மீதுள்ள காதலால் திருந்தி வாழ நினைத்து, தனது பூர்வீக வீட்டை விற்று, அந்தப் பணத்தில் தாலி, புடவை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள அல்லியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் கொலையாளியை விரட்டிச் சென்றபோது, சேது சிக்குகிறார். இவரிடம் நகை, புதிய புடவை என இருந்ததால் காவல்நிலையத்திற்கு கூட்டிச் செல்கின்றனர்.
பின்னர் காவல்துறையினரிடம் இருந்து மீண்டு வந்தாரா ? சேது, அல்லியின் காதல் என்னானது ? வயதான தம்பதியர் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது மீதிக்கதை…

வயிற்றுப் பிழைப்புக்காக ஆடு திருடி பிழைப்பு நடத்தும் சேது, தன்னையும் ஒரு ஜீவன் விரும்புகிறதே என்பதை உணர்ந்து, திருந்தி வாழ நினைக்கும் போது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் குற்றவாளியாக மாற்றுகிறது என்பதை சுவாரஸ்யம் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதே சமயம் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நாயகன் சேதுவும், சம்ருதி தாராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காவல் ஆய்வாளராக சி.எம் குமார், ஏட்டு சூப்பர் குட் சுப்பிரமணி இருவரும் நன்றாக நடித்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள பி.எல் தேனப்பன், கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.