சோதனை விஜய் சேதுபதிக்கா !.? படம் பாப்பவர்களுக்கா ? “ஏஸ்” படத்தின் விமர்சனம்

7 சி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுக குமார் தயாரிப்பில், விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லு பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஏஸ்”.
கதைப்படி.. விஜய் சேதுபதி தனது சுய அடையாளங்களை மறைத்து போலியான அடையாளங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து மலேசியா செல்கிறார். அங்கு யோகி பாபு உதவியிடன் ஹோட்டலில் வேலைக்குச் சேர்கிறார். பின்னர் தான் வசிக்கும் வீட்டிற்கு எதிரில் வசித்துவரும் ருக்மணியை கண்டதும் காதல் கொள்கிறார். பின்னர் ருக்மணி தனது வளர்ப்பு முன்னாள் போலீஸ் அதிகாரியும், தனது வளர்ப்பு தந்தையுமான பப்லுவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பது தெரிய வருகிறது. அவருக்கு பணத்தேவை இருப்பதையும் உணர்கிறார்.

இதனால் அங்குள்ள கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். அப்போது தோற்கடிக்கப்பட்டு கடனாளி ஆகிறார். பின்னர் விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை பறித்துக் கொள்கின்றனர். கடனிலிருந்து மீள்வதற்காகவும், காதலியை காப்பாற்றுவதற்காகவும் விஜய் சேதுபதி மேற்கொள்ளும் முயற்சி தோல்வியடைந்து, மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
சூதாட்ட கிளப் கும்பலிடம் கடனை அடைத்து உடமைகளை மீட்டாரா ? காதலியை காப்பாற்றினாரா ? என்பது மீதிக்கதை…

மலேசியாவிற்கு சுற்றுலா சென்றபோது, கிடைத்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, ஏனோதானோ என நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இவர் எதற்காக தனது அடையாளத்தை மறைத்து மலேசியா செல்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. கதையிலும், திரைக்கதையிலும், வசனங்கள் எழுதும்போதும் இயக்குநர் கவணம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் லாஜிக் இல்லாமல், சுவாரஸ்யம் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். இதுபோன்ற சலித்துப்போன கதைக்களத்தில் விஜய் சேதுபதியை நடிக்கவைத்து, ரசிகர்களை சோதித்திருக்கிறாரோ என்னவோ !
பின்னணி இசை அமைத்துள்ள சாம் சி எஸ், சண்டை காட்சிகளில் ஒவர் பில்டப் கொடுத்திருக்கிறார். முன்னனி நடிகர்கள் அளவுக்கு விஜய் சேதுபதிக்கு அமைத்துள்ள பின்னணி இசையால் காதுகளை பதம் பார்த்துள்ளார்.
யோகி பாபுவின் இயல்பான டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. கதாநாயகி ருக்மணி வசந்த் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டுக்குரியது.