தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பதவியை பயன்படுத்தி மோசடி செய்தவர் கூட்டமைப்பு தலைவரா !.?

தமிழ் திரையுலகில் சினிமா தொழிலாளர்களுக்கு இது போதாத காலமோ என்னவோ, இரு தினங்களுக்கு முன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒருசில நிர்வாகிகளின் சுயநலம்தான் புதிய சங்கம் ஆரம்பிக்க முக்கிய காரணம் என கூறியிருந்தார்.
அதற்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது புதிய சங்கத்தின் தலைவர் என தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி பேசுகையில், காலம்காலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள், அவர் தலைமையில் இயங்கும் சங்கத்தில் இணைந்தால், அவர் நிர்ணயிக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்வாதிகார போக்குடன் பேசியிருந்தார்.

இதுசம்பந்தமாக பெப்சி தொழிலாளர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசியபோது, புதிய சங்கத்தின் தலைவர் அழகன் தமிழ்மணி பத்திரிகையாளர்கள் மத்தியில் கொடைக்கானல் படப்பிடிப்பில், பணம் கொடுத்தால்தான் ஆட்கள் வருவார்கள் என பெப்சி கூறியதாகவும், அவர் பணத்தை கொடுத்தபின் ஆட்கள் வந்ததாகவும் கூறியது முழுக்கமுழுக்க பொய்யான தகவல். அதாவது இன்றைய தேதிவரை இன்னும் அந்த பத்தாயிரம் ரூபாயை அழகன் தமிழ்மணி, பெப்சி தொழிலாளிகளுக்கு வழங்கவில்லை.

மேலும் இவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தபோது, இவர் தயாரித்த ஒரு படத்தின் உரிமையை இரண்டு நிறுவனங்களிடம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது ஊரறிந்த தகவல். இப்போது புதிய சங்கத்தின் தலைவராக வந்து இங்கு என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
காலங்காலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், எங்களுக்கும் இருந்துவரும் உறவை முறிக்க நினைக்கும் இவரெல்லாம் தொழிற்சங்க தலைவரா ? எங்கள் தலைமைக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு மீண்டும் பழையபடி தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் எங்கள் பணியை தொடர்வோம் என ஆதங்கத்துடன் கலைந்து சென்றனர்.