சினிமா தொழிலாளர்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆர்.கே. செல்வமணி !

தமிழ் திரையுலகை ஆபத்தான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே செல்வமணியின் சமீபத்திய செயல்பாடுகள் உணர்த்துவதாக சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
இது சம்பந்தமாக தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் நம்மிடம் பேசுகையில், திரைப்படத்துறை சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம். அந்த அங்கீகாரத்தை வழங்கிய அப்போதைய முதலமைச்சர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா எடுத்தபோது, விழாவிற்கான செலவுத் தொகை நான்கு கோடியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பெற்றுக்கொண்டு, விழாவை பொறுப்பேற்று நடத்திய ஆர் கே செல்வமணி, தான் அதிமுகவின் ஆதரவாளர் என்பதை நிரூபிக்கும் வகையில், விழாவை ஏனோ தானோ என கலைஞரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடத்திக் காட்டினார்.
அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

சில மாதங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது, பாஜகவின் வளர்ச்சி குறித்து முக்கிய நபர்களிடம் ஆலோசனை நடத்தியபோது, செல்வமணியும் கலந்துகொண்டு பாஜகவின் வளர்ச்சி குறித்து பேசினார். பின்னர் தற்போது நடந்து முடிந்த மே தின விழாவில், தமிழ் திரையுலகிற்கு எவ்வளவோ நலத்திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், மத்திய இணை அமைச்சர் எல். முருகனை பாராட்டி பேசினார்.


இதற்கு முன்னர் சம்மேளத்தில் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஆளும் அரசாங்கத்தை அனுசரித்து, சினிமாத்துறைக்கு எவ்வளவோ சலுகைகளை பெற்றுத்தந்துள்ளனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக, சினிமா தொழிலாளர்களுக்காக, தயாரிப்பாளர்கள் துணை இல்லாமல், தனியாக என்றாவது ஒருநாள் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறாரா ? அதாவது அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் உதயகுமார், பாஜக நிர்வாகி பேரரசு உள்ளிட்டோரை இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் அமரவைத்து அந்த சங்கத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றதுதான் செல்வமணியின் சாதனை.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை அழிக்க வேண்டும் என, படைப்பாளிகள் அமைப்பின் மூலம் போராடிய தலைமை தளபதிதான் இந்த ஆர் கே செல்வமணி ! அப்போது நிறைவேறாத அந்த கனவை நிறைவேற்றும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து, சம்மேளனத்திற்கு மூடிவிழா நடத்தி, பெஸ்ரா என புதிய அமைப்பின் துவக்க விழா நடத்தினார். ஆனால் பெரும்பாலான சங்கங்கள் பெஸ்ரா கார்டு வாங்க முன்வராத காரணத்தால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
தொழிற்சங்கத்தின் தலைவர், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், சம்மேளனத்தை முடக்க நினைக்கும்போது, சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, அவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க நினைக்கிறது தாயாரிப்பாளர்கள் சங்கம். செல்வமணி தலைவராக வந்ததிலிருந்து இதுவரை, எந்த நன்மையும் நடந்ததில்லை. ஏற்கனவே நாங்கள் வாங்கிய சம்பளத்தை குறைத்தது தான் அவர் செய்த சாதனை என வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.
_சூரியன்