தமிழகம்

திருப்பூரில் கணவரை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! பாதுகாப்பு வழங்குமா காவல்துறை ?.!

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணி பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த நிலையில், மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்தன.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதில், நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாகவும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஒரு மாதம் கழித்து மணிக்கு பேச்சு வராமல் கஷ்டப்படவே, திரும்பவும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு மருத்துவர் வலி நிவாரணி மருந்து மாத்திரை கொடுத்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனிடையே 2024 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மணி திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பயாப்சி சோதனைக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அங்கு மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 2023 ஆண்டு முதலே மணிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், 4 வது நிலையில் பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு மனைவி சாதனபிரியா தனது நகைகளை விற்றும் வீட்டை அடமானம் வைத்து ரூ. 20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

இதனிடையே அவினாசி பைபாசில் செயல்பட்டு வரும் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் கணவர் மணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 03.02.2025 அன்று திருப்பூர் ஆட்சியரிடம் சாதன பிரியா புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு மீது விசாரணை மேற்கொண்ட இணை இயக்குனர் தனியார் மருத்துவமனைக்கு சாதகமாக செயல்படுவதாக சாதன பிரியா குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் கணவர் மணி வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்தமகன் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நிறுத்திய கொடுமையும் அரங்கேறியுள்ளது.

தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரை எமனிடம் போராடி மீட்க மனைவி சாதனபிரியா போராடி வரும் நிலையில், வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

அதிகாலை முதல் வீட்டில் தையல் வேலை செய்தும், பனியன் நிறுவனத்தில் வேலைசெய்து அதில் வரும் வருமானத்தில் கணவரின் உயிரை காப்பாற்ற போராடி வரும் மனைவி சாதனபிரியா கூறும்போது, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க 5 லட்சத்திற்கு 1.50 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு கணவர் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் எனவும், காவல் துறை பாதுகாப்பு வழங்கிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button