தமிழகம்

சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் என்.கூத்தமங்கலத்தை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றில் இருந்து கூத்தமங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும். இந்த கண்மாய் நீரின் மூலம் 220 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. வெள்ளாறு பகுதிகளில் லாரிகள், டிராக்டர், மாட்டுவண்டி மூலம் தொடர்ச்சியாக மணல் திருடபட்டு வருகிறது.மணல் திருடுவதற்கு கிராம மக்களும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.வெள்ளாற்றில் மணல் திருடுவதற்காக சாலையும் அமைக்கபட்டுள்ளது.
மழை காலத்தில் மட்டுமே வெள்ளாற்றில் தண்ணீர் செல்வதால் மணல் அள்ளபட்டு அதிகளவில் குழிகள் இருப்பதால் நீரோட்டம், நீரின் தடம் பாதிக்கபடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கபட்டிருப்பதால் விவசாயம் கேள்விகுறியாகி உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டம் கூத்தமங்கலம் கிராம வெள்ளாறு பகுதியில் மணல் அள்ள இடைகால தடைவிதிக்க வேண்டும், வெள்ளாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் “ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கூத்தமங்கலம் கிராம வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள இடைகால தடைவிதித்தனர்.மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை மாவட்ட பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button