தமிழகம்

வேலூர் சிறை கைதியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அப்போது, டி.ஐ.ஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் காணாமல் போனதாகக் கூறி அவரை அடித்து தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து சிவக்குமாரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்முலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரித்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில் சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில், வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான்

இந்த நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி வினோத்சாந்தாராம் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சேலம் சிறைக்குள் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் இரவு சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலத்தை கேமராவில் பதிவு செய்துகொண்டனர்.

அடுத்தகட்டமாக வேலூர் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வேலூருக்கு விரைந்திருக்கின்றனர், சி.பி.சி.ஐ.டி போலீஸார். வேலூர் மத்திய சிறையில் காலை முதல் மாலை வரையிலும் சிறை மருத்துவர், சக கைதிகள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவிட்டு வெளியேறினர்.

அப்போது, சில பதிவேடுகளையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய வேலூர் சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமானை, சென்னை புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள். மேலும், புழல் சிறைக் கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம், சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள், வேலூர் மத்தியச் சிறையிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button