தமிழகம்

ரேஷன் அரிசி கடத்தல்! : எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள்…

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை, ரேஷன்கடை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை, தமிழகம் முழுவதும் தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வடக்கு பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், நடைபெற்ற சோதனையில் 5 டன் ரேஷன் அரிசியை, திருவள்ளூர் மாவட்டம், ரெட் ஹில்ஸ் ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பிரேம்குமார் வேனில் கடத்தி வந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வாகனத்தை விரட்டிக் பிடித்து சோதனை செய்ததில் 5 டன்னுக்கும் மேலாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. பின்னர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த பிரேம்குமார கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பல ஆண்டுகளாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, போலீசாருக்கு ஆட்டம் காட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், பிரேம்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல, சென்னை அயனாவரம் பகுதியில், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்தப்பகுதியில் வேகமாக வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டையில் (ஒரு டன்) ரேஷன் அரிசி இருந்துள்ளது. பின்னர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மனோகரன் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவிற்கு கொண்டு சென்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து மனோகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சென்னை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (தெற்கு) ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போரூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த துளசி ராமன் என்கிற ராமாபுரம் சதீஷ் என்பவர் 3 டன் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றுள்ளார். அப்போது மடக்கிப்பிடித்து சோதனை நடத்தியபோது, வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக பத்திற்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் இவரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளார். அதன்பிறகு கடந்த 2021- 2023 ஆண்டுகளில் கள்ளச்சந்தை தடுப்பு காவலில் சிறையில் இருந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் இந்த ஆண்டு மட்டும் இவர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் ராமாபுரம் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டதின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

-கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button