தமிழகம்

பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார் ! கலக்கத்தில் ரவுடிகள் !

சென்னை புழல் சிறைச்சாலை அருகே உள்ள வெஜிடேரியன் நகரில்  பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த கொலையை செய்ததாக 11 பேர் அண்ணாநகர் உதவி ஆணையரிடம் ஆஜராகி கைதானார்கள். அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஏழு நாட்கள் தேவைப்படும் என நீதிமன்றத்தில் கேட்ட நிலையில், ஐந்து நாட்கள் வழங்கியது நீதிமன்றம்.

இந்நிலையில் 11 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வந்த போலீசார், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம்  என்பவரை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் அவர் பல்வேறு உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்ததின் பெயரில், மேலும் புலன் விசாரணை மேற்கொண்டு, தடயங்களை சேகரிப்பதற்காக அவரை புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாக தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அவர் சரணடைய மறுத்து, வீட்டின் அருகே ஒரு குடிசைக்குள் வீட்டின்  வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முயன்று, தப்பிச்சென்று பதுங்கியிருந்த நிலையில், ஆய்வாளர் சரவணன் அதிகாலை 5.30 மணியளவில் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் போலீசார் தற்காப்புக்காக திருவேங்கடத்தின் வலது தோள்பட்டையில் ஒரு தோட்டா,  
மார்பு பகுதியில் இரண்டு தோட்டாக்கள் என மூன்று ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ  இடத்திலேயே ரவுடி திருவேங்கடம் உடல் சரிந்து இறந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த என்கவுண்டர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான அருள் என்பவரின் உயிர் நண்பர் என்கிறார்கள். இவர்தான் இந்த கொலைக்கான திட்டங்கள் தீட்டியது மற்றும் கொலை திட்டம் வகுத்து வேவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில், ஆறு நாட்டு வெடி குண்டுகளும், ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கதிகலங்க செய்ததோடு,  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button