கோவை மேயர் கல்பனா ராஜினாமா, அடுத்த மேயர் ரேஸில் மீனா லோகு, இளஞ்செல்வி ?.!
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/07/IMG-20240702-WA0050-780x470.jpg)
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமாக நேற்றைய தினமே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/07/image_editor_output_image-433118950-17200133105534398985844023315400-300x188.jpg)
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அ.தி.மு.க கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.
இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க வில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தி.மு.க கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் சுமூகமான உடன்பாடு ஏற்படாமல், தி.மு.க கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக வெளிப்படையாகவே தெரிந்தது.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/07/img-20240702-wa00448870059933689610853-1024x935.jpg)
இந்த நிலையில் கட்சியின் மேலிடம் உத்தரவின் பெயரில் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேயர் பதவி கல்பனாவிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், இனி அந்த பதவியை கைப்பற்ற மாவட்ட செயலாளர் கார்த்தியின் மனைவி இளஞ்செல்வி, மீனா லோகு, தமிழ்மறையின் மனைவி தெய்வானை ஆகியோர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.