விமர்சனம்

குடிப்பவர்கள் கதை சுவாரஸ்யமானதா ? எரிச்சலூட்டுகிறதா ? “கிளாஸ் மேட்” திரைவிமர்சனம்

முகவை ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஜெ. அங்கயற்கண்ணன் தயாரிப்பில், சரவணசக்தி இயக்கத்தில், அங்கயற்கண்ணன், ப்ரானா, சரவணசக்தி, மயில்சாமி, சாம்ஸ், மீனாள், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கிளாஸ்மேட்”.

கதைப்படி… கதையின் நாயகன் ( அங்கயற்கண்ணன் ), அவரது மாமா ( சரவணசக்தி ) இருவரும் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக குடிப்பதையே முழு வேலையாக எண்ணி செயல்படுகின்றனர். இவர்களின் குடியை நிறுத்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் அந்த மருத்துவரையும் குடிக்க வைத்து விடுகிறார்கள். என்ன சொன்னாலும் இருவரும் திருந்த மாட்டார்கள் என இருவரது வீட்டிலும் இவர்களை தண்ணி தெளித்து விட்டது போல் யாரும் கண்டுகொள்வதில்லை. இப்படியே தொடரும் சமயத்தில், குடியை மறந்து குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வந்த மயில்சாமி, இவர்களை திருந்துமாறு அறிவுரை வழங்க, அவரையும் குடிக்க வைத்து விடுகிறார்கள்.

பின்னர் சாம்ஸ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகிறார். அவருக்கு திருமணம் நடக்க இருந்த சமயத்தில் அவரையும் குடிக்க வைத்து, அந்த திருமணம் நின்றுபோக காரணமாகிறார்கள். நின்றுபோன திருமணத்தை மீண்டும் நடத்துவதற்காக, பெண் வீட்டாரிடம் பேசுவதற்காக மயில்சாமியை அழைத்துக் கொண்டு போகும்போது விபத்து ஏற்பட்டு மயில்சாமி இறந்து போகிறார்.

இதன்பிறகு மயில்சாமி யின் குடும்பம் என்னானது ? இவர்கள் இருவரின் குடும்பத்தில் என்ன நடந்தது ? இருவரது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

குடி குடியை கெடுக்கும் என்கிற ஒற்றை வரியை வைத்து, “டாக்குமெண்டரி” படமாக எடுக்க வேண்டிய கதையை முழுநீள படமாக எடுக்க சம்மதித்த தயாரிப்பாளருக்கு தைரியம் அதிகம் என்றே சொல்லலாம். இதில் அவரே நாயகனாகவும் நடித்திருப்பதால் செலவு செய்த பணம் வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார் அல்லவா ?

இந்தப் படத்தின் இயக்குநர் சரவணசக்தி நாயகனின் மாமாவாக நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்களில் குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நடிப்பு நன்றாக வரும்போது அதையே தொடர முயற்சிக்கலாம். இவர் சில படங்கள் இயக்கியிருந்தாலும் சசிகுமார் நடிப்பில் வெளியான “குட்டிப்புலி” படம் மட்டுமே சொல்லக்கூடிய படமாக அமைந்தது. திரைக்கதையில் சசிக்குமார் தலையிட்டு மாற்றங்கள் செய்திருப்பாரோ என்னவோ, குட்டிப்புலி இவருக்கு அமைந்தது. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணராமல் தன்னுடைய கருத்தை திணிக்க நினைத்தால், தயாரிப்பாளரின் நிலைமை ??? படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

நடிகர் சாம்ஸ் தோன்றும் காட்சிகளில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறார். அதேபோல் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button